×

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் 3 பேர் பலியான வழக்கு: கமல்ஹாசன் நடித்துக்காட்ட தேவையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் குற்றப்பிரிவு போலீஸ் முன்னிலையில் இன்று ஆஜராகி நடித்துக்காட்ட தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் விலக்களித்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கடந்த மாதம் 19ம் தேதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிருஷ்ணன், மது, சந்திரன் ஆகிய 3 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பரத்குமார் என்பவர் அளித்த புகாரில் கிரேன் ஆபரேட்டர் ராஜன், புரடெக்‌ஷன் மேனேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணைக்கு நடிகர் கமல்ஹாசன் மார்ச் 3ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகுமாறு பிப்ரவரி 29  அவருக்கு மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது. இதையடுத்து, கமல்ஹாசன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கமளித்தார்.இந்நிலையில், மார்ச் 18ம் தேதி நேரில் ஆஜராகி சம்பவ இடத்தில் நடித்துக் காட்டுமாறு கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு கடந்த 16ம் தேதி சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை ரத்து செய்யக்கோரியும், தனக்கு குற்றப்பிரிவில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் நடிகர் கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஏற்கனவே போலீசார் அனுப்பிய சம்மனில் மார்ச் 3ல் மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன். இடைவெளியில்லாமல் மூன்று மணி நேரம் விளக்கமளித்தேன். ஆனால் மறுபடியும், இ.வி.பி. பிலிம் சிட்டியில் மார்ச் 18ல் ஆஜராகி சம்பவ இடத்தில் நடந்ததை நடித்துக்காட்டும்படி மார்ச் 16ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. என்னை துன்புறுத்தும் நோக்கில் இந்த சம்மன் அரசியல் நோக்குடன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கின் எஃப்.ஐ.ஆர்ல் நான் ஹீரோ என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர, விபத்துடன் நான் எப்படி சம்பந்தப்பட்டுள்ளேன் என்று சொல்லவில்லை.

படப்பிடிப்பு தள விபத்து தொடர்பான எந்த வழக்கிலும் படத்தின் கதாநாயகனை அழைத்ததாக முன் மாதிரிகள் எதுவும் இல்லை. விபத்து வழக்கில் ஹீரோவுக்கு சம்மன் அனுப்பிய முதல் வழக்கு இதுதான். இந்தியன்-2 பட விபத்து வழக்கு விசாரணை என்ற போர்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவால் நான் துன்புறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசன் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜரானார்.

விபத்து தொடர்பாக மார்ச் 3ம் தேதி 3 மணி நேரம் விசாரணைக்கு கமல்ஹாசன் ஒத்துழைத்துள்ளார். சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் அதே இடத்திற்கு சென்று மீண்டும் வந்து விளக்க முடியாது. இது விபத்து வழக்கு மட்டும் தானே தவிர கொலை வழக்கு அல்ல. அரசியல்வாதியாக இருப்பதால், துன்புறுத்தும் நோக்கத்தோடு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று கமல்ஹாசன் தரப்பில் வாதிடப்பட்டது. போலீஸ் தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ் ஆஜராகி  வாதிடும்போது, விபத்து நடந்தப்போது நடிகர் கமல் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அவர் நேரில் பார்த்த சாட்சி என்ற அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

கமல் மட்டுமல்லாமல் இயக்குனர் சங்கர் உள்ளிட்ட படக்குழுவை சேர்ந்த 24 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகன் என்பதற்காக புலன் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வருவதால் சட்டம் ஒழுங்கில் எந்த  பிரச்னையும் ஏற்படாது. இதில் எந்த அரசியல் உள் நோக்கமும் இல்லை என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் ஆஜராக அவசியமில்லை. விசாரணைக்கு தேவைப்பட்டால் கமல் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில்  ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags : Kamal Haasan ,shooting incident ,shooting site ,Indian ,Chennai High Court , Indian-II case, Chennai High Court, order
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...