புதுடெல்லி: ‘‘எம்.எஸ்.சி படித்தவருக்கு சென்னை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளி பணி கிடைக்கிறது. வேலைவாய்ப்பின்மை பிரச்னையை தீர்க்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?’’ என மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பினார். மக்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தில், திமுக எம்.பி ஆ.ராசா பேசுகையில், ‘‘வேலை வாய்ப்பின்மை 45 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. எம்.எஸ்.சி கணிதம் படித்தவருக்கு சென்னை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளி பணியில் சேரக்கூடிய நிலை உருவாகி உள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ படித்தவர்களுக்கு ரயில்வேயில் கலாசி-உதவியாளர் பணி கிடைக்கிறது. வேலை வாய்ப்பின்மை நிலைமையை சமாளிக்க அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?’’ என்றார்.
காங்கிரஸ் எம்.பி அதூர் பிரகாஷ் பேசுகையில், ‘‘நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிரித்துள்ளதா?’’ என்றார். இதேபோல் எம்.பி.க்கள் பலரும் வேலைவாய்ப்பின்மை நிலவரம் தொடர்பான கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கேங்வார் கூறியதாவது: வேலைவாய்ப்புக்காக பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளவர்கள் அனைவருமே, வேலை பார்க்காமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 2017ம் ஆண்டு நிலவரப்படி பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 4.24 கோடி. கடந்த 2016-17ம் ஆண்டில் வேலைவாய்ப்பில் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தின் 8 துறைகளில் 6.16 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.