ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா நகரில் இருந்து ராம்தியோராவில் உள்ள பாபா ராம்தியோ கோயிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்த புதுமண தம்பதி உள்பட குடும்பத்தினர் காரில் புறப்பட்டனர். இந்த கார் ஜோத்பூர் மாவட்டத்தின் சொய்ன்தரா கிராமத்தில் வளைவில் திரும்பிய போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியது. இதில் காரில் சென்ற புதுமண தம்பதி, பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்த மூன்று பேர் உயர் சிகிச்சைக்காக ஜோத்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கிரேன் உதவி மூலம் நசுங்கிய நிலையில் இருந்த வாகனங்களைப் பிரித்தெடுத்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.