புதுடெல்லி, : சுற்றுச்சூழல் சீரழிவைத் தடுக்கவும் ஒரே விதமான காகிதப் பயன்பாட்டினை செயல்படுத்தவும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் ஏ4 அளவு காகிதங்களில் மட்டுமே மனுக்களைப் பெற உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏ3, லீகல், ஏ4 என பல்வேறு அளவிலான காகிதங்களில் ஒரு பக்கம் மட்டுமே அச்சிடப்பட்டதாக இருந்து வந்தது. மனுக்கள் அதிகளவு இடம் விட்டு எழுதப்படுவதாலும், அச்சிடப்படுவதாலும் பெருமளவு காகிதம், பணம் விரயம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதற்கிடையே, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உச்சநீதிமன்ற பதிவாளருக்கு கடந்த ஜனவரி 14ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், உள்மட்ட அளவிலான தகவல் தொடர்புகளுக்கு ஏ4 காகிதத்தின் இரண்டு பக்கங்களையும் பயன்படுத்தும்படி அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட மார்ச் 5ம் தேதியிட்ட புதிய சுற்றறிக்கையில், `நீதிமன்றங்களில் ஒரே மாதிரியான காகிதப் பயன்பாட்டினை செயல்படுத்தவும் சுற்றுச்சூழல் சீர்கேடு, காகித விரயம் ஆகியவற்றைத் தடுக்கவும் ஏ4 காகிதத்தின் இரு பக்கங்களிலும் அச்சிடப்பட்ட மனுக்கள் மட்டுமே வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பெறப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, கடந்த ஜனவரி 26ம் தேதியிட்ட சுற்றறிக்கையில், காகிதப் பயன்பாட்டினைக் கருத்தில் கொண்டு குறைந்தளவிலான காகிதங்களைப் பயன்படுத்தவும் இரு பக்கங்களிலும் அச்சிடவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.