புதுடெல்லி: மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்.சி., என்.ஐ.டி., ஆகிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. என்ற ஒருங்கிணைந்த நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்.சி., என்.ஐ.டி., போன்ற நிறுவனங்களில் சேர்வதற்கு, இந்த நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு இரண்டு முறை நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
ஜனவரியில் முதல் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. அந்த வகையில் இரண்டாம் கட்ட ஜே.இ.இ. நுழைவு தேர்வானது வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 7ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, மார்ச் 6 முதல் பதிவு காலம் முடிந்தது. தொடர்ந்து மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று விண்ணப்பத்திற்கான அவகாசம் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதற்கான கூடுதல் விவரங்களை https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.