×

அப்துல்லாபுரம்- தார்வழி சாலைக்கு, மாற்றுச்சாலை அமைப்பது எப்போது? மந்த கதியில் நடக்கும் விமான நிலைய பணிகள்

* குடிநீர் டேங்க் விரைவில் இடித்து அகற்ற நடவடிக்கை


வேலூர் : வேலூர் விமான நிலையத்துக்கு தேவையான அப்துல்லாபுரம்- தார்வழி சாலைக்கு பதிலாக மாற்றுச்சாலை  அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படாமல் மந்த கதியில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையத்தை பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மொத்தம் உள்ள 120 ஏக்கர் பரப்பளவில் முதற்கட்டமாக ரூ.32.52 கோடியில் மேம்படுத்தி சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக வேலூர் விமான நிலையத்தில் டெர்மினல் பில்டிங், 800 மீட்டர் ரன்வே, வாகன நிறுத்துமிடம், விமான நிலைய கட்டிடங்கள், துணை கட்டிடங்கள், மின்சார கட்டிட பணிகள் 80 சதவீதம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இப்பணிகளை முடித்து சுற்றுச்சுவர் கட்டவும், ரன்வேயை விரிவுப்படுத்தவும் விமான நிலையத்தின் நடுப்பகுதியில் அப்துல்லாபுரம்- தார்வழி சாலை வருவதால் அந்த சாலையை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

 அந்த சாலையை ஒப்படைப்பதில் தொடர்ந்து இழுபறியாக இருந்து வந்தது. இதனால் விமான நிலைய பணிகள் முழுமை யடைவதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் கடந்த மாதம் 4ம் தேதி போக்குவரத்து முதன்மை செயலாளர், நெடுஞ்சாலை துறை செயலாளர், வேலூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைகூட்டம் நடந்தது. இதில் அப்துல்லாபுரம்- ஆலங்காயம் மாநில நெடுஞ்சாலை எண் 122ன் ஒரு பகுதியை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்கு மாற்றாக விமான நிலைய ஆணையத்தின் சுற்றுப்புறத்தில் அருகிலேயே ஒரு தற்காலிக மாற்றுச்சாலை ரூ.1.7 கோடியில் அமைப்பது என்று அனைத்து துறை அலுவலர்களால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மாற்றுச்சாலை அமைப்பதற்கான பணிகளில் முழுவீச்சில் அதிகாரிகள் ஈடுபடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலை அமைக்க அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். ஆனால் அதன்பிறகு அது தொடர்பான அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்கான ஒப்புதலை இன்னும் மாநில நெடுஞ்சாலைத்துறை வழங்கவில்லையாம்.

இதனால் விமான நிலைய பணிகள் அனைத்தும் மந்த கதியில் நடந்து வருகிறது. எப்போது விமான நிலையம் பணிகள் முடியும் என்று தெரியாத சூழ்நிலை தான் உள்ளது. இருப்பக்கமும் உயர்மட்ட சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
 சாலை கொடுத்தால் மட்டுமே சுவர் எழுப்ப முடியும். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையில் உள்ள விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் இந்த பணியை கவனித்து வந்தார். அவர் இறந்துவிட்டதால், அவர் கவனித்த வந்த பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளது. இருப்பினும் விமான நிலையத்தின் அருகில் உள்ள குடிநீர் டேங்க் விரைவில் இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் அந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


விமானத்தில் செல்ல டிக்கெட் கேட்டு வந்த 3 பேர்

வேலூர் விமான நிலையம் நேற்றுமுன்தினம் அதாவது 10ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருவதாகவும், சென்னை- பெங்களூர் இடையே சேவை தொடங்குவதாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது. குறிப்பாக ஸ்பைட் ஜெட், இன்டிகோ, ஏர்ஆசியா ஆகிய 3 விமானங்கள் செயல்பட உள்ளதாகவும் தகவல் வதந்தி பரவி உள்ளது.


இதை நம்பி நேற்று முன்தினம் காலை ஒரு காரில் 3 பேர் வேலூர் விமான நிலையத்துக்கு வந்தனர். பின்னர் பெங்களூர் செல்வதற்கு விமான டிக்கெட்டை எங்கு வாங்க வேண்டும் என்று அங்கிருந்த பாதுகாவலர்களிடம் கேட்டுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பாதுகாவலர்கள் விமான சேவை எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. இன்னும் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. சமூகவலைத்தளங்களில் பரவி வருவது எல்லாம் தவறான தகவல் என்று திரும்பி அனுப்பி உள்ளனர். அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.



Tags : road ,recession ,Connecting Road ,airport work ,Abdullapuram ,Vellore ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி