திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 25ம் தேதி உகாதி ஆஸ்தானம் நடக்கிறது. இதையொட்டி ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 25ம் தேதி உகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் தொடங்கி தங்க கதவு அருகே தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி காலை 6 மணிக்கு விஸ்வ சேனாதிபதியுடன் இணைந்து ஆனந்த நிலையத்தை சுற்றி வலம் வந்து கொலு வைக்கப்பட உள்ளனர். தொடர்ந்து காலை 7 மணி முதல் 9 மணிக்கு இடையே ஆனந்த நிலையம் மற்றும் கொடி மரத்தை சுற்றி ஊர்வலமாக வர உள்ளனர். பின்னர் மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும் புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு சார்வரி ஆண்டுக்கான வருட பஞ்சாங்கத்தை கோயிலின் அர்ச்சகர்கள் படித்து காண்பிக்க உள்ளனர். உகாதி ஆஸ்தானத்தையொட்டி அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற இருந்த சகஸ்ர கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருப்பதியில் புதிய கட்டுப்பாடு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். அனைத்து இடங்களிலும் பக்தர்கள் அதிகளவில் இருப்பதால் இடைவெளியுடன் செல்வது இயலாதது. இவ்வாறு செல்லும்போது வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டுக்கு சென்று வந்தவர்கள், வெளிநாட்டினர் ஏழுமலையான் கோயிலுக்கு வரவேண்டுமென்றால், இந்தியாவிற்கு வந்து 28 நாட்களுக்கு பிறகுதான் கோயிலுக்கு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.