×

மார்ச்சில் ‘சித்திரை வெயில்’ களைகட்டும் கம்மங்கூழ் வியாபாரம்

தேனி: தேனி மாவட்டத்தில் மார்ச் மாதமே சித்திரை போல் அக்னி வெயில் சுட்டெரிப்பதால், கம்மங்கூழ், மோர் வியாபாரம் களை கட்டி வருகிறது. தேனி மாவட்டத்தில் ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குளிர்ச்சியான ஈரப்பதம் நிறைந்த காற்று வீசும். லேசான சாரல் இருக்கும். மாவட்டத்தின் நான்கு பகுதிகளிலும் மலைகள் சூழ்ந்திருப்பதால் மினி கொடைக்கானல் போன்று தேனி மாவட்ட பருவநிலை அனைவரையும் கவரும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போனது. வடகிழக்கு பருவமழையும் தாமதமாக தொடங்கி, டிசம்பர் முதல் வாரமே நிறைவடைந்தது.

டிசம்பர் 2வது வாரம் முதல் காற்றில் ஈரப்பதம் குறைந்து அனல்காற்று வீச தொடங்கியது. வழக்கமாக சித்திரை மாதம் கோடையில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் மார்ச் மாதமே துவங்கியுள்ளது. மாவட்டத்தில் கண்மாய்கள், குளங்கள் வறண்டு, விளைநிலங்கள் காய்ந்து கிடக்கின்றன. மக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததால் வியாபாரம் இல்லை என வியாபாரிகளும் புலம்புகின்றனர். ஆனால் தேனி நகரில் வெயிலில் அலையும் மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் கம்மங்கூழ், மோர் கடைகளுக்கு அதிகம் செல்கின்றனர். எனவே இக்கடைகளில் வியாபாரம் களைகட்டுகிறது. வழக்கமாக இருக்கும் வியாபாரத்தை விட இந்த ஆண்டு மார்ச் மாதமே வியாபாரம் உச்சத்தை எட்டி உள்ளது என கம்மங்கூழ் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : business , March, commercial, commercial, commercial
× RELATED 1,303 ஆதி திராவிட மகளிர் மற்றும்...