மதுரை: மதுரை - புனலூர் இடையேயான பாசஞ்சர் ரயில் ஜூன் 30-ம் தேதி முதல் விரைவு ரயிலாக மாற்றப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்க்கத்திலும் புனலூர்-மதுரை இடையேயான பாசஞ்சர் ரயில் சேவை ஜூலை 1-ம் தேதி முதல் விரைவு ரயில் சேவையாக மாற்றப்படும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் செங்கோட்டை - புனலூர் மீட்டர் கேஜ் இரயில் பாதை அகற்றப்பட்டு தற்போது புதிதாக அகல இரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் பாதையில் அதிவேக இரயில் இயக்கி சோதனை நடத்திய பிறகு, இரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்தப் பாதையில் ஏற்கனவே செங்கோட்டையில் இருந்து பகவதிபுரம் வரையிலும், மறுமார்க்கத்தில் புனலூரில் இருந்து எடமண் வரையிலும் பாசஞ்சர் இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், முழுமையாக இரயில் இயக்கப்படவில்லை. இந்தப் பாதையில் நெல்லையில் இருந்து தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக கொல்லத்துக்கும், மதுரையில் இருந்து கொல்லத்துக்கும் பாசஞ்சர் இரயில்கள் இயக்கப்படும் என்று இரண்டு மாநில பயணிகளும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் மதுரையில் இருந்து விருதுநகர் செங்கோட்டை வழியாக புனலூர்க்கு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது.
இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் இதை விரைவு ரயிலாக மாற்றக்கோரி பயணிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை - புனலூர் இடையேயான பாசஞ்சர் ரயில் ஜூன் 30-ம் தேதி முதல் விரைவு ரயிலாக மாற்றப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்க்கத்திலும் புனலூர்-மதுரை இடையேயான பாசஞ்சர் ரயில் சேவை ஜூலை 1-ம் தேதி முதல் விரைவு ரயில் சேவையாக மாற்றப்படும் என தெரிவித்துள்ளது.