சென்னை: அனைத்து இட ஒதுக்கீட்டு பிரிவினருக்குமான சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: கொரோனோ வைரஸை விட மிகக் கொடியது சனாதனம் தான். அத்தகைய கொடுமையான ஜனாதனத்தை அம்பேத்கார், பெரியாரின் கொள்கைகளால் தான் ஒழிக்க முடியும். அரசியல் அமைப்பு சட்டம் மூலம் சமூக நீதி பின்பற்றப்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இதற்கு காரணம் அம்பேத்கார் இயற்றிய அரசியலமைப்பு சட்டம் தான். அந்த அரசியலைமைப்பு சட்டம் மீது சங்பரிவார் அமைப்புகள் தங்களின் ஆத்திரத்தை வெளிக்காட்ட மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கிறார்கள். சமூக நீதியை வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்து, சிதைத்து அழித்தொழிப்பது தான் சங்பரிவார் அமைப்புகளின் இலக்கு.