பாட்னா : பீகார் மாநிலம் முஸாபர்பூரில் காரும் டிராக்டரும் மோதிய விபத்தில் 11 பேர் மரணம் அடைந்தனர். பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே கன்ட்டி என்ற இடம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஸ்கார்பியோ காரும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 11 நிகழ்விடத்திலேயே பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்கள் முஸாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முசாபர்பூரின் காந்தி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட என்.எச் -28 நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.கார் அதிவேகத்தில் சென்றதால் விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்த தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடம் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தோரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.