திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு கோயிலில் பிராமணருக்காக தனி கழிப்பறை ஒதுக்கப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதால், அந்த அறிவிப்பு பலகை அப்புறப்படுத்தப்பட்டது. கேரள மாநிலம், திருச்சூர் அருகே பிரசித்தி பெற்ற குட்டுமுக்கு மகாதேவர் கோயில் உள்ளது. இதில், தற்போது திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில், பக்தர்கள், பூசாரிகள் பயன்படுத்துவதற்காக கோயில் பகுதியில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. இதில், ஒரு கழிப்பறை பிரமாணர்களுக்காக என்று பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டு இருந்தது. மேலும், அந்த கழிவறையில் வெளியே ‘பிராமணர்கள்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த கிறிஸ்டோ என்பவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது வைரலாக பரவியது.
இதையடுத்து, கோயில் நிர்வாகத்துக்கு ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட கோயில் நிர்வாகம், கழிவறையின் மீது வைக்கப்பட்டு இருந்த ‘பிராமணர்கள்’ அறிவிப்பு பலகையை உடனடியாக அகற்றியது.
இது குறித்து குட்டுமுக்கு மகாதேவர் கோயில் செயலாளர் பிரேம குமாரன் கூறுகையில், ‘‘இந்த அறிவிப்பு பலகை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டது. இதுவரை யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எங்கள் கவனத்துக்கு வந்தவுடன் பலகையை அகற்றி விட்டோம். அந்த வாலிபர் முதலில் எங்கள் கவனத்துக்கு இதை கொண்டு வந்திருக்கலாம். சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, திட்டமிட்டே கோயிலின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டார். இது தொடர்பாக அவர் மீது போலீசில் புகார் செய்ய உள்ளோம்,’’ என்றார்.
கொச்சின் தேவசம் போர்டு தலைவர் மோகனன் கூறுகையில், ‘‘கழிப்பறையில் பிராமணருக்கு என்று தனி பலகை வைத்தது தொடர்பாக எனது கவனத்துக்கு வந்தவுடன் அதை அப்புறப்படுத்துமாறு கூறி விட்டேன். இது தொடர்பாக விசாரணை நடத்த கொச்சின் தேவசம் போர்டு உதவி ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றார். கேரள ேயாக ஷேம சபை முன்னாள் செயலாளர் ஹரி நம்பூதிரி கூறுகையில், ‘‘வழக்கமாக ேகாயில்களில் பூசாரிகள் குளிக்கவும், பிறவற்றுக்காகவும் தனி வசதி ஏற்படுத்தப்படுவது உண்டு. ஆனால், இதை ஜாதி ரீதியாக சிலர் திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். பிராமணர்களுக்கும், மற்ற சமூகத்தினர்களுக்கும் இடையே எந்த பாகுபாடும் கிடையாது,’’ என்றார்.