×

'2021ம் ஆண்டு வரை கருணை மனு தாக்கல் செய்ய உரிமை உள்ளது' : தூக்கு தண்டனைக்கு எதிராக கருணை மனு அளிக்க அனுமதிக் கோரும் நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங்

புதுடெல்லி: நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய மறுசீராய்வு மனு, கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என முகேஷ் சிங் மனுவில் குறிப்பிட்டுள்ளார். முகேஷ் சிங்கின் சட்ட வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்ட நிலையில் மேலும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் முதலில் தங்களுக்கு ஆதரவாக வாதாடுவதற்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தன்னை வற்புறுத்தி முன்கூட்டியே கருணை மனுக்களை கையெழுத்து வாங்கியதாக மனுவில் முகேஷ் சிங் குறிப்பிட்டுள்ளார். சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட தேதியில் இருந்து 3 ஆண்டு காலம் வரை கருணை மனுக்களை தாக்கல் செய்ய கால அவகாசம் இருப்பதாகவும் தனக்கு 2021ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி வரை கருணை மனு தாக்கல் செய்ய உரிமை உள்ளதாகவும் முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.நிர்பயா பாலியல் பலாத்கார, கொலை குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி காலையில் தூக்கிலிடும்படி நேற்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.


*டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 16ம் தேதி இரவு பஸ்சில் பயணம் செய்த 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா, 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியதால் 2 வாரங்களுக்குப் பின் இறந்தார்.

*குற்றவாளிகள் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

*இவர்கள் ஒவ்வொருவராக மறுபரிசீலனை மனு, சீராய்வு மனு, ஜனாதிபதிக்கு கருணை மனு என தாக்கல் செய்தனர். இதனால், இவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றும் தேதி 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

*பவன் குப்தா என்ற குற்றவாளி ஜனாதிபதிக்கு கடைசியாக அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. *இதையடுத்து, டெல்லி அரசு நேற்று விசாரணை நீதிமன்றத்தை அணுகி, குற்றவாளிகளுக்கு சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளும் முடிந்து விட்டதால், அவர்களுக்கான தூக்கு தண்டனை தேதியை அறிவிக்கும்படி கோரியது.

*குற்றவாளிகள் தரப்பும் வக்கீலும், சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை என கூறினார்.  இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கில் போடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

*இந்நிலையில் தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய சீராய்வு மனு மற்றும் கருணை மனு அளிக்க அனுமதிக்க முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Mukesh Singh , Delhi, medical student, Nirbhaya, rape, murder, case, convicts, hanging, Mukesh Singh, conviction
× RELATED நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை...