சென்னை: சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் நீட்டிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 9.1 கி.மீ தூரம் வரையிலான இந்த வழித்தடத்தில் இயக்குவதற்காக மெட்ரோ ரயில் பெட்டிகளை நிர்வாகம் 10 ரயில்களை ஆர்டர் செய்தது. இதற்காக பெங்களூரு சிட்டியில் உள்ள நிறுவனம் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதன்படி முதல் ரயில் பெட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து 10வது மற்றும் கடைசி ரயில் பெட்டி தர பரிசோதனைக்கு நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வழித்தடத்தில் அனைத்து பணிகளும் ஜூன் மாதம் நிறைவடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.