×

சிவகிரியில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை கழுத்தை அறுத்து கொடூர கொலை: தங்கை கணவர் வெறிச்செயல்

சிவகிரி: தென்காசி மாவட்டம், சிவகிரி தென்மலை இந்திரா காலனியைச் சேர்ந்தவர் முனியப்பன் (27). ஜேசிபி டிரைவரான இவருக்கும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பெண்ணுக்கும் இன்று காலை சிவகிரி, தென்மலையில் திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக முனியப்பனின் தங்கை முனீஸ்வரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம், பேரையூரில் இருந்துதாய் வீட்டுக்கு வந்திருந்தார். மணமகன் முனியப்பன் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் தூங்கச் சென்றார். மற்றொரு அறையில் அவரது தாய் பஞ்சவர்ணம் (51), தங்கை முனீஸ்வரி (24) ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் திடீரென முனியப்பனின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. தங்கை முனீஸ்வரி, தாய் பஞ்சவர்ணம் ஆகியோர் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது கையில் அரிவாளுடன் ஒருவர் தப்பியோடுவது தெரிந்தது. அறையில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் முனியப்பன் இறந்து கிடந்தரர்

தகவலறிந்த புளியங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் மணமகனின் தங்கை கணவரான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பேரையூர் பொட்டல்பட்டியை சேர்ந்த  வீர சங்கிலிமுருகன் (28), புதுமாப்பிள்ளை முனியப்பனை கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். “தங்கையின் கணவராகிய எனக்கு சுருள் வைத்து மரியாதை செய்து அழைக்கவில்லை. இதனால் முனியப்பன் மீது ஆத்திரத்தில் அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன்” என அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர். இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுமாப்பிள்ளையை தங்கை கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : murder ,Sivagiri ,wedding , Sivagiri, Today's Wedding, Newcomer's Child, Necklace, Cruel Murder
× RELATED காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்