திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் பிள்ளையார் கோயில் குளம் உள்ளது. திருத்துறைப்பூண்டி பெரியகோயில் கட்டுபாட்டில் உள்ள இந்த குளத்தின் அருகே நெடும்பலம் கடைதெரு மற்றும் பழனி ஆண்டவர் கோயிலும் உள்ளது. இந்த குளத்தை அக்கிராம மக்கள் மட்டுமின்றி, திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை சாலை என்பதால் வழிபோக்கர்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது குளம் முழுவதும் வெங்காயதாமரை செடிகள் மண்டி கிடப்பதால் குளத்து நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி கோயில் நிர்வாகம் குளத்தை சுத்தம் செய்யவில்லை என்றால், ஊராட்சி நிர்வாகம் 100 நாள் வேலை திட்டத்திலாவது வெங்காய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.