போடி: போடி பரமசிவன் கோயில் தெருவில் உள்ள தினசரி சந்தையில் வாறுகால் பாலம் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், போடியில் உள்ள பரமசிவன் கோயில் தெருவில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் நகரில் உள்ள பொதுமகக்ள் காய்கறி மற்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்தச் சந்தைக்கு ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தேனி, சின்னமனூர் ஆகிய ஊர்களிலிருந்து தக்காளி மற்றும் காய்கறிகள் தினசரி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த சாலையைச் சுற்றி கடைகளாக பிரிக்கப்பட்டு, அதில் பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். இதில், தினசரி சேகரமாகும் கழிவுகளை, போடி நகராட்சி நிர்வாகம் அற்றி சுத்தம் செய்து வருகின்றனர். மற்ற சமயங்களில் சந்தையை ஒட்டியுள்ள வாறுகாலில் கழிவுகளை கொட்டுகின்றனர். இதில், புழுக்கள், கொசுக்கள் உருவாகி சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது. இதையடுத்து கடைக்காரர்கள் கொடுத்த புகாரின்பேரில், ஒரு மாதத்திற்கு முன்பு, நகராட்சி நிர்வாகம், ஜேசிபி மூலம் வாறுகாலை தூர்வாரி கழிவுகளை அகற்றினர். இந்நிலையில், வாறுகாலில் கடைக்காரர்கள் மரப்பலகைகளால் தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். இதில், செல்லும் வியாபாரிகள், பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, போடி நகராட்சி நிர்வாகம் சந்தையில் உள்ள வாறுகாலில் சிமெண்ட் பாலம் அமைக்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.