சென்னை: முன்னாள் எம்எல்ஏ கோவை தம்பியின் வீட்டில் புகுந்து அவரது பேரனை சரமாரியாக பிளேடால் கிழித்து கொல்ல முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் முன்னாள் எம்எல்ஏ கோவை தம்பி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் ேநற்று முன்தினம் நள்ளிரவு கோவைதம்பியின் வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. வீட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த கோவைதம்பியின் பேரன் சச்சின் (17) கதவை திறந்துள்ளார். அப்போது திடீரென மர்ம நபர்கள் சச்சின் மீது பிளேடால் சரமாரியாக கிழித்து விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த சச்சின் வலி தங்க முடியாமல் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கோவைதம்பி மற்றும் வீட்டில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்த போது சச்சின் ரத்த காயங்களுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சம்பவம் குறித்து சினிமா தயாரிப்பாளர் கோவைதம்பி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விரைந்து வந்து காயமடைந்த சச்சினை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு வழக்கு பதிவு செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தேனாம்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.