மதுரை: மதுரை ஆவினில் காலியாகவுள்ள 17 இயக்குநர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு வெளியானது. 43 பேர் மனு செய்த நிலையில், 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முறையாக தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேட்புமனு பரிசீலனை தொடர்பான சிசிடிவி காட்சிகள், இரண்டு பெரிய டிவிக்களில் நீதிபதிகள் முன்பு போட்டு காட்டப்பட்டது.
இதை நீதிபதிகள் பார்த்தனர். பின்னர் நீதிபதிகள், மனுக்கள் மீதான பரிசீலனை என்பது குறிப்பிட்ட பதவிக்கு, மனு செய்தவர்கள் அனைவரையும் வைத்து தான் நடத்த வேண்டும். அப்படி நடந்தது போலத் தெரியவில்லை. எனவே, போட்டியின்றி தேர்வான 13 பேரில் பழநியப்பன், தங்கராஜ் தவிர மீதமுள்ள 11 பேரும் இயக்குநர்களாக செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. 4 இடங்களுக்கு திட்டமிட்டபடி 4ம் தேதி (இன்று) தேர்தல் நடத்தலாம். தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் முறையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.