×

பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம்.. ஏப்ரல் 25ம் தேதி தேர்தல் அறிவிப்பு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்கூட்டியே கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைப்பு அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து 9வது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி நடைபெறும் என்று இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு மே மாதம் 14ம் தேதி கூடும் என்றும் இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டது ஏன் ?


*இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்ற பின், இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார். பின்னர், தனது அண்ணன் மகிந்தா ராஜபக்சேயை இடைக்கால பிரதமராக கோத்தபய நியமித்தார்.

*சிறிசேனாவும், ரணில் விக்ரமசிங்கேயும் அதிபர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்தபோது அதிபரின் அதிகாரங்களை குறைத்து, நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், 19ஏ திருத்தம் கொண்டு வரப்பட்டது.

*இந்த திருத்தம், தற்போதைய அதிபர் கோத்தபயவுக்கு பல வகைகளில் தடையாக உள்ளது. இதில் மீண்டும் திருத்தம் கொண்டு வர அவர் விரும்புகிறார். மேலும், 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு ஆதரவு தனது கட்சிக்கு இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்.

*இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிகிறது. ஆனால், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்காக, நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டுமிட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே நேற்று முன்தினம் தெரிவித்தார்.

*அதன்படியே இலங்கை நாடாளுமன்றத்தை, அதன் பதவிக் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே கலைத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று உத்தரவிட்டார்.

Tags : Sri Lanka Parliament ,expiration , Sri Lanka, Parliament, Tenure, Gotabhaya Rajapaksa, Election Commission
× RELATED நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்...