அம்பை: மணிமுத்தாறு மலை சாலை பணியை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட தென்காசி - ஊத்து அரசு பஸ்சை மீண்டும் இயக்க மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி புலிகள் காப்பகத்தில் தனியார் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் 4 கோட்டங்களாக அமைந்துள்ள இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேர் குடும்பத்துடன் தங்கியிருந்து தேயிலை தோட்ட வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள் கல்வி மற்றும் பிற வேலை நிமித்தமாக நெல்லை, தென்காசி, அம்பாசமுத்திரம் போன்ற பிற பகுதிகளுக்கு செல்லவும், வெளியூரில் வசித்து வரும் உறவினர்களை
காணவும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்று வர வசதியாக பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து மாஞ்சோலை பகுதிக்கு தினமும் 3 பஸ்கள் 6 முறை இயக்கப்பட்டு வந்தன.
அதில் ஒரு பஸ் தென்காசியில் இருந்து நண்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு ஊத்து பகுதிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த பஸ் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பயன் உள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்ட மணிமுத்தாறு அருவி சாலையை காரணம் காட்டி இந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் மாஞ்சோலை மற்றும் ஊத்து உள்ளிட்ட பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 3 பேருந்தில் ஒரு பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று வர முடியாது சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
மணிமுத்தாறு அருவி சாலை சீரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் 2 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், தென்காசி - ஊத்து அரசு பஸ் மட்டும் இயக்கப்படவில்லை. எனவே, மீண்டும் இந்த பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து பாபநாசம் பணிமனை கிளை மேலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் தென்காசி-ஊத்து பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.