சுரண்டை: இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் `டிக் டாக்’ மொபைல் ஆப் பிரபலமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் “டிக் டாக்” மொபைல் ஆப்பை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகை செயலிகளை ஒருசிலர் தவறான முறையில் பயன்படுத்துகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
டிக் டாக் ஆப்-களால் உயிரிழப்பு போன்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் டிக் டாக் ஆப்களை தடை செய்ய பரிசீலித்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து இந்த வகை மொபைல் ஆப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. எனினும் அவற்றை தவறாக பயன்படுத்தி சைபர் கிரைம் பிடியில் சிக்குவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் டிக்டாக் ஆப்பில் ஆபாசமாக பதிவேற்றம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதுபற்றிய விவரம் வருமாறு: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அருணாசலபுரம் கூலிபத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கண்ணன் (19). தனியார் கல்லூரி மாணவரான இவர், சமீபகாலமாக டிக் டாக்கில் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி வந்தார். இந்நிலையில் அவர், டிக் டாக்கில் ஆபாசமாக பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சேர்ந்தமரம் எஸ்ஐ தினேஷ்பாபு தலைமையிலான போலீசார், இன்று கண்ணனை கைது செய்தனர்.