×

அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் 15 காவல் நிலையங்களுக்கு ஒரே போக்குவரத்து பிரிவு: விபத்து வழக்குகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்

அம்பத்தூர்: அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் 15 காவல் நிலையங்களுக்கு ஒரே போக்குவரத்து புலனாய்வு பிரிவு மட்டுமே இருப்பதால், விபத்து நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அம்பத்தூர் காவல் மாவட்டம் உள்ளது. இதில் அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, திருமுல்லைவாயல், ஆவடி டேங்க் பேக்டரி, பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர், எஸ்.ஆர்.எம்.சி., திருவேற்காடு, பூந்தமல்லி, மாங்காடு, நசரத்பேட்டை, குன்றத்தூர் ஆகிய 15 காவல் நிலையங்கள் உள்ளன. புறநகராக இருந்தபோது, மேற்கண்ட காவல் நிலையங்களில் எந்த இடத்திலும் விபத்து நடந்தாலும், அந்தந்த காவல் நிலைய போலீசார் தான் முன்பு விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் ஏதேனும் விபத்து நடந்தால் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்துவிடுவார்கள். இது, அப்பகுதி மக்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால், தற்போது மாநகர் காவல் ஆணையரகத்துடன் இணைந்த பிறகு, அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் எங்கு விபத்து நடந்தாலும், பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மட்டுமே விசாரணைக்கு வரவேண்டும்.அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில் உள்ள சி.டி.எச். சாலை, ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை, திருநின்றவூர்-பெரியபாளையம் சாலை, பூந்தமல்லி-மவுண்ட் சாலை, கொல்கத்தா நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் தான் அதிகளவு சாலை விபத்துக்கள் நடக்கின்றன. தினமும் ஒருவராவது விபத்தில் பலியாகின்றனர். பலர் படுகாயமடைகின்றனர்.

  இந்நிலையில், அம்பத்தூர் அடுத்த பாடியில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டால், அதை விசாரிப்பதற்காக 25 கி.மீ தொலைவில் உள்ள பூந்தமல்லியில் இருந்து போக்குவரத்து புலனாய்வு போலீசார்தான் வரவேண்டும். கடும் போக்குவரத்து நெரிசலை தாண்டி அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. விசாரணைக்காக சம்பந்தப்பட்டவர்களும் அங்கேயே காத்திருக்க வேண்டும், என்ற நிலை உள்ளது.    சென்னை மாநகரத்தில் ஒரு உதவி கமிஷனருக்கு கீழ் இயங்கும் 3 அல்லது 4 காவல் நிலையத்திற்கு ஒரு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளது. எனவே, அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், எஸ்.ஆர்.எம்.சி, பூந்தமல்லி ஆகிய உதவி கமிஷனர்களின் கீழ், 5 போக்குவரத்து புலனாய்வு பிரிவுகளை அமைக்க வேண்டும். அப்படிச் செய்தால் விபத்து நடக்கும் இடத்திற்கு உடனடியாக போலீசார் வந்து அதிரடி நடவடிக்கை எடுக்க முடியும். அல்லது குறைந்தபட்சம் ஆவடி, அம்பத்தூர் பகுதிகளிலாவது கூடுதலாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே போலீஸ் உயர் அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு, அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் போக்குவரத்து புலனாய்வு பிரிவை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.

அம்பத்தூர் அடுத்த பாடியில் ஒரு சாலை  விபத்து ஏற்பட்டால், அதை விசாரிப்பதற்காக 25 கி.மீ தொலைவில் உள்ள  பூந்தமல்லியில் இருந்து போக்குவரத்து புலனாய்வு போலீசார்தான் வரவேண்டும்.  கடும் போக்குவரத்து நெரிசலை தாண்டி அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு  சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. விசாரணைக்காக  சம்பந்தப்பட்டவர்களும் அங்கேயே காத்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது


Tags : police district ,Ambattur ,police stations , Ambattur, police district,15 police stations,,
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...