×

வேலூரில் லஞ்சம் வாங்கி சிக்கினார்: துணை ஆட்சியர் வீட்டில் ₹50 லட்சம் பறிமுதல்

வேலூர்: ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தனித்துணை ஆட்சியர் (டெபுடி கலெக்டர்) சிக்கினார். காரில் சேசிங் செய்து அவரை விஜிலென்ஸ் போலீசார் பிடித்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவுக்கு உட்பட்ட இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(31), விவசாயி. இவர்களது முன்னோரின் பூர்வீக விவசாய நிலத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி தனது பெயருக்கு கிரையம் செய்துள்ளார். இந்நிலையில் நிலத்தை கிரையம் செய்வதற்கான முத்திரைத்தாளை காட்டிலும், குறைவான தொகை செலுத்தியிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரிக்க வேலூர், திருவண்ணாமலை தனித்துணை ஆட்சியர்(முத்திரை கட்டணம்) அலுவலகத்துக்கு கடந்த மாதம் 9ம் தேதி கண்ணமங்கலம் சார்பதிவாளர் பரிந்துரை செய்தார். இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட தனித்துணை ஆட்சியர் (முத்திரை கட்டணம்) தினகரன்(47) என்பவர், ‘உனது நிலத்தின் மதிப்புக்கு ரூ.1.25 லட்சம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால், குறைந்த மதிப்பில் பணம் செலுத்தியிருப்பதால் கிரையம் செல்லாது. எனவே, பணத்தை செலுத்த வேண்டும்’ எனக்கூறியுள்ளார். அதற்கு ரஞ்சித்குமார், ‘நான் விவசாயி, என்னால் உடனடியாக அவ்வளவு பணம் செலுத்த முடியாது. சில நாட்களில் பணத்தை செலுத்திவிடுகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதற்கிடையில் தனித்துணை ஆட்சியர் தினகரன், கடந்த வாரம் மாவட்ட ஆய்வு குழு அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், ரஞ்சித்குமாரை போனில் தொடர்பு கொண்டு, ‘உடனடியாக ரூ.50 ஆயிரம் கொடுத்தால், முத்திரை கட்டணத்தை குறைத்து மதிப்பிடுகிறேன். நான் பணியிடமாறுதலில் செல்வதால், உடனடியாக பணத்துடன் வரவேண்டும். இல்லாவிட்டால், உன்னுடைய கிரையம் கடைசி வரை செல்லாமல் போய்விடும்’ என்று கூறினாராம். இதனால், அதிர்ச்சியடைந்த ரஞ்சித்குமார் இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட விஜிலென்ஸ் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து விஜிலென்ஸ் போலீசார் ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை ரஞ்சித்குமாரிடம் கொடுத்தனுப்பினர். தொடர்ந்து நேற்றிரவு வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் அருகே வந்து பணத்தை கொடுக்கும்படி தனித்துணை ஆட்சியர் தினகரன் கூறினார். அதன்படி, ரஞ்சித்குமார் அங்கு சென்றார். நேற்றிரவு 10 மணிக்கு அங்கு வந்த தினகரன், பணத்தை உடனடியாக வாங்காமல் ரஞ்சித்குமாரை காரில் ஏற்றிக்கொண்டு பழைய பஸ்நிலையம் சென்றார். காரை போளூரை சேர்ந்த டிரைவர் ரமேஷ்குமார்(31) ஓட்டினார். வழியிலேயே பணத்தை வாங்கிக்கொண்டு, பஸ்நிலையத்தில் அவரை இறக்கிவிட்டுவிட்டு புறப்பட்டார். அப்போது, அவரை 3 கார்களில் பின்தொடர்ந்து வந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்ட விஜிலென்ஸ் டிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினி, மைதிலி, எஸ்ஐ தினேஷ்குமார் உட்பட 10 பேர் கொண்ட குழுவினர் கையும் களவுமாக பிடிக்க முயன்றனர்.

ஆனால், யாரோ பின்தொடர்வதை அறிந்துகொண்ட தினகரன், காரில் வேகமாக புறப்பட்டார். அவரை போலீசார் விரட்டிச்சென்று சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே நேற்றிரவு 10.30 மணியளவில் மடக்கி பிடித்தனர். காரில் இருந்து ரூ.50 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது பஸ்நிலையத்தில் இருந்த ரஞ்சித்குமாரையும் போலீசார் ஒரு காரில் அழைத்து வந்திருந்தனர். மேலும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனித்துணை ஆட்சியர்(முத்திரை கட்டணம்) அலுவலகத்துக்கு தினகரன், கார் டிரைவர் ரமேஷ்குமார் ஆகியோரை அழைத்துச்சென்று சோதனை நடத்தினர். இதில் ஆவணங்களுக்கு இடையில் ஆங்காங்கே மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத ரூ.1.94 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் விடியவிடிய இன்று காலை 7.20 மணி வரை விசாரணை நடத்தினர். இதையடுத்து இருவரையும் காட்பாடி அருகே தாங்கல் கிராமத்தில் உள்ள தினகரனின் வாடகை வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அங்கு ₹50 லட்சம் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது சொந்த ஊரான போளூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலும் சோதனை நடத்தப்படும் என தெரிகிறது. மேலும், சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விஜிலென்ஸ் போலீசார் கூறுகையில், ‘தனித்துணை ஆட்சியர் தினகரன் பலரிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். இதில் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் முக்கிய மூளையாக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் தினகரன் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் சிலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சிலரை அலுவலகத்துக்குள் அழைத்தும், சிலரை வெளியிடத்திற்கு வரவழைத்தும் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்காக சொந்த காரை பயன்படுத்தியதோடு, அவரது சொந்த ஊரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரை டிரைவராக நியமித்துள்ளார். தனித்துணை ஆட்சியர் தினகரனை நேற்று காலை முதல் கண்காணித்து வந்தோம். ஆனால் குடியாத்தம் ஆர்டிஓ பொறுப்பையும் கவனிப்பதால், நேற்று காலை குடியாத்தம் சென்றார். இதனால், நேற்றிரவு 10 மணிக்குத்தான் அவர் வேலூர் வந்தார். அதன்பின்னர் லஞ்சம் வாங்கியபோது விரட்டிச்சென்று பிடித்தோம். தினகரன் வீட்டில் ரூ.50 லட்சம் ரொக்கம், கலெக்டர் அலுவலகத்தில் ரூ.1.44 லட்சம் மற்றும் லஞ்சம் பெற்ற பணம் ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.52.44 தினகரன் மற்றும் ரமேஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Tags : Vellore ,house ,deputy collector , Bribery
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...