சென்னை: பிரசாத் ஸ்டூடியோ இடத்தில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று இளையராஜா தொடர்ந்த வழக்கை 2 வாரத்திற்குள் விசாரித்து முடிக்குமாறு கீழ் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜா வெளியேற அந்த நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து, இளையராஜா சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இரு தரப்பிற்கும் இடையேயான இந்த வழக்கு 17வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தன்னுடைய இட உரிமை தொடர்பாக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் சமரச மையத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இளையராஜா சார்பில் வக்கீல் ஏ.சரவணன் ஆஜரானார். அப்போது நீதிபதி 40 ஆண்டுகள் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் இருந்துள்ளார். இன்னும் கொஞ்ச காலம் இருக்கப்போகிறார், அதில் பிரச்னை என்ன இருக்கிறது என்றார்.இதை பிரசாத் ஸ்டூடியோ தரப்பு வக்கீல் அப்துல் சலீம் ஏற்கவில்லை. இதையடுத்து, இந்த பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை 2 வாரத்துக்குள் முடித்து உத்தரவு பிறப்பிக்குமாறு சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.