டெல்லி: விஷவாயு தடுப்பு முக கவசங்கள் மற்றும் அறுவை சிகிச்சை கத்திகள் உள்ளிட்ட மேலும் சில மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுக்கு ஒருசில மருந்துபொருட்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது. சீனாவின் தலைநகர் வூஹானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நோயாளிகளுக்கு தேவையான முகமூடிகள், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து மருத்துவ உபகரணங்கள், மருந்துபொருட்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதற்கிடையில், சீனாவுக்கு நட்பு ரீதியாக மத்திய அரசு மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்களை வழங்க முன்வந்தது.
தொடர்ந்து, சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து, இந்தியாவில் அனைத்து விதமான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதிக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக தடை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முக கவசங்கள், கையுறைகளின் ஏற்றுமதிக்கான தடையும் நீக்கப்பட்டது. இந்த நிலையில் விஷவாயு தடுப்பு முக கவசங்கள், அறுவை சிகிச்சை கத்திகள், கண் சிகிச்சை உபகரணங்கள், சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு உபகரணங்கள் உட்பட மேலும் 8 விதமான மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காற்று நுண்துகள் மாசு தடுப்புக்கு பயன்படுத்தப்படும் என் - 95 வகை முக கவசங்களின் ஏற்றுமதிக்கான தடை தொடர்ந்து நீடிப்பது குறிப்பிடத்தக்கது.