×

அதிக மருத்துவ குணம் நிறைந்த பப்பாளியை தாக்கும் மாவுப்பூச்சி: கட்டுப்படுத்த ஆலோசனை

மாவுப்பூச்சி தாக்குதலில் இருந்து பப்பாளியை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜாரமேஷ், ராமசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்த அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மாவுப்பூச்சிகள் பயிர்களில் பொருளாதார சேதத்தை உண்டாக்காத பூச்சிகளாக இருந்த நிலை மாறி, தற்போது அதிக சேதத்தை உண்டாக்கும் பூச்சிகளில் மிக முக்கிய பூச்சியாக மாறியுள்ளது. உலகில் பல்வேறு வகையான மாவுப்பூச்சிகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒரு வகைதான பப்பாளியை தாக்கும் மாவுப்பூச்சி. இதன் விஞ்ஞான பெயர் பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் என்பதாகும். தமிழ்நாட்டில் முதன் முதலாக கோயம்புத்தூர் பகுதியில் ஜூலை மாதம் 2008ம் ஆண்டு கண்டறியப்பட்டது.மாவுப்பூச்சி தாக்குதலுக்கான காரணங்கள்: வறண்ட வானிலை மற்றும் அதிகமான வளிமண்டல வெப்பநிலை அதன் தாக்குதல் முதன்மையான காரணிகளாகும். இந்த மாவுப்பூச்சியின் உடலைச் சுற்றியுள்ள மெழுகுப்படலமானது ரசாயன பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளிடமிருந்து அவற்றிற்கு பாதுகாப்பு அளித்து காக்கிறது. அதிக முட்டையிடும் திறன், அதாவது ஒரு பூச்சி 500 முதல் 600 முட்டைகளை இடும். எனவே அதிகளவில் பெருகி பெருத்த சேதத்தை உண்டு பண்ணுகிறது. மேலும் ஒரு வருடத்திற்கு 15 முறை இனப்பெருக்கம் செய்கிறது. காற்று, தண்ணீர் மழை, பறவைகள், மனிதர்கள் மற்றும் எறுப்புகள் மூலம் எளிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவுகின்றன.

பப்பாளி மாவுப்பூச்சி வாழ்க்கை சுழற்சி: தாய்பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்துடன் வெள்ளை வெள்ளை பிசின் பூச்சுடன் 2.2 மி.மீ நீளம், 1-4 மி.மீ அகலத்துடன் காணப்படும். முட்டைவெளிர் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். ஒவ்வொரு முட்டை பையிலும் 100 முதல் 600 முட்டைகள் வரை இருக்கும். முட்டை மற்றும் குஞ்சுகள் வளர்ச்சி பருவம் 10 நாட்கள் ஆகும். பெண்பூச்சிகள் 4 பருவநிலையையும், ஆண் பூச்சிகள் 5 பருவ நிலையையும் கொண்டவை.
தாக்கும் இதர பயிர்கள்: இந்த மாவுப்பூச்சியானது பப்பாளியை மட்டுமல்லாது பருத்தி, செம்பருத்தி, கத்தரி, வெண்டை, மரவள்ளி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களையும், பார்த்தீனியம், தத்தி போன்ற களைகள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட தாவரங்களையும் தாக்கி சேதத்தை உண்டு பண்ணுகிறது.

கட்டுப்படுத்தும் முறை: மாவுப்பூச்சிகளை ஒருங்கிணைந்த முறைகளை பின்பற்றி கட்டுப்படுத்த வேண்டும். களைச் செடிகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தாக்கப்பட்ட பகுதிகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். பப்பாளி மாவுப்பூச்சிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 பூச்சிகள் என்ற எண்ணிக்கையில் வெளியிட வேண்டும். கிரிடோலேமஸ் பொறி வண்டின் புழுக்கள் மாவுப்பூச்சியின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் உண்கின்றன. இந்த இரை விழுங்கியை பயன்படுத்தி மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்பெண்ணெய் 2 சதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் அல்லது வேப்பங்கொட்டைக் கரைசல் 5 சதம் அல்லது மீன் எண்ணெய் சோப் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25கிராம் என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். மாவுப்பூச்சிகளின் தாக்கதலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்திட தாவர மருந்துகள் மற்றும் உயிரியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றனர்.

Tags : High-powered,papaya,advice, control
× RELATED இயந்திரக் கோளாறு – 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்