கிருஷ்ணகிரி: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம், சாம்பல் புதனுடன் தொடங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தூய ஃபாத்திமா அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்று நெற்றியில் சாம்பலை வைத்துக்கொண்டு தவமுயற்சிகளை தொடங்கினர். திண்டுக்கல் மாவட்டத்தில் செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை தொடங்கினர். நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்ல் புதனையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். புதுச்சேரியிலும் தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல், வில்லியனூர் லூர்துமாதா தேவாலயம் பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. உலகெங்கும் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் முதல் ஈஸ்டர் வரை 40 நாட்கள் தவக்காலத்தை கடைபிடிப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான தவக்காலம் இன்று முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடைறெவுள்ளது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.