திருவொற்றியூர்: மணலி பாடசாலை தெருவில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு, 850 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 20 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் இடநெருக்கடியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மழை காலத்தில் கசிவு ஏற்பட்டு வகுப்பறைக்குள் தண்ணீர் புகுந்துவிடும் நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளிடம் மாணவர்களின் பெற்றோர் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியிடம் இதுபற்றி முறையிட்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், புதிய வகுப்பறை கட்டுவதற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதி இருந்து 1.5 கோடி ஒதுக்கீடு செய்தார். இதில், 2 தளங்கள் கொண்ட வகுப்பறை மற்றும் ஆய்வுக்கூடம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆரம்பப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டப்பட உள்ள இடத்தை கலாநிதி வீராசாமி எம்பி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, 6 மாதத்திற்குள் கட்டிடப்பணி முடிவடைந்து மாணவர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என தெரிவித்தார். அவருடன், மணலி மண்டல உதவி ஆணையர் ராஜசேகர், தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, திமுக நிர்வாகிகள் ஏ.வி.ஆறுமுகம், கரிகால் சோழன், முத்துசாமி, கோபி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.