திருவனந்தபுரம்: கேரளாவின் குளத்துப்புழாவில் பாகிஸ்தான் துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.கேரளாவின் குளத்துப்புழா வனப்பகுதியில் 30 அடி பாலம் அருகே சாலையோரம் நாளிதழில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பார்சல் கிடந்தது. அதில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 14 துப்பாக்கி குண்டுகள் இருந்தன. தோட்டாக்கள் சிக்கிய இடத்தில் ராணுவ உளவுத்துறை, மத்திய உளவுத்துறை அமைப்புகளான என்ஐஏ, ரா மற்றும் ஐபி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பல்வேறு கோணங்களில்விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் திருவனந்தபுரம் - குளத்துப்புழா - புனலூர் சாலையில் பல்வேறு பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ேபாலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. குளத்துப்புழா மற்றும் தென்மலை உள்பட சுற்றியுள்ள இடங்கள் வனப்பகுதியோடு சேர்ந்துள்ளதால் வனப்பகுதியிலும் தேடுதல் வேட்டை நடக்கிறது. இந்நிலையில் கொல்லத்தில் தமிழக எல்லையையொட்டி சமீபத்தில் சில வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்துள்ளனர். இவர்களில் சிலரை என்ஐஏ பிடித்து விசாரித்து வருகிறது.