சென்னை: உலக, நபார்டு வங்கிகளில் கடன் தொகை அதிகமானதால் தர மறுத்து விட்டதால், ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கியை தமிழக அரசு நாடி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இனி வருங்காலங்களில் இந்த வங்கிகளில் கடன் பெற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல துறைகள் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நிதியுதவியை பெறுவதில் தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே தான் உலக வங்கி, நபார்டு, ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவி பெற்று ஒவ்வொரு திட்டங்களும் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, பொதுப்பணித்துறையில் அணைகள், ஏரிகள் புனரமைப்பு திட்டம், நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு சாலைகளை தரம் உயர்த்தும் திட்டம் உட்பட பல்வேறு துறைகள் சார்பில் கடன் வாங்கி தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வங்கிகளிடம் இருந்து இதுவரை 4 லட்சம் கோடி வரை கடன் நிலுவை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அந்த வங்கிகள் சார்பில் தமிழகத்துக்கு தொடர்ந்து கடன் தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ₹11 ஆயிரம் கோடி மதிப்பிலான காவிரி பாசன வடிநிலத்தை மேம்படுத்தும் திட்டம்,
சென்னையில், நிரந்தர வெள்ள தடுப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு ஏற்கனவே ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கியை கடன் கேட்டு தமிழக அரசு அணுகியது. ஆனால், அந்த வங்கிகள் சார்பில் ஏற்கனவே கடன் தொகை அதிகமானதால், இந்த திட்ட பணிகளுக்கு கடன் தர மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால், தற்போது கடனுதவி கேட்டு ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கியை தமிழக அரசு அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள்.அந்த வங்கி உயர் அதிகாரிகள் முதல்வரை சந்தித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வங்கிகள் தரும் கடனுதவி மூலமே வரும் காலங்களில் தமிழகத்தில் பல துறைகள் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்து இருப்பதாக அரசு உயர் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.