சென்னை: ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஊழல் வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீதரன் என்பவர், முன்ஜாமீன் கோரி திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அதனை விசாரிக்க அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனையடுத்து, முன்ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், தனது முன்ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊழல் வழக்குகளை விசாரிக்க மட்டுமே சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாகத் நீதிபதி தெரிவித்தார். மேலும், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனக்கூறிய நீதிபதி, மனுதாரர் திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.