பெங்களூர் : பாகிஸ்தான் ஆதரவு குரல் எழுப்பிய மாணவர்களின் நாக்கை வெட்டுப்பவர்களுக்கு ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கர்நாடகத்தில் ஸ்ரீ ராம் சேனா தலைவர் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்ஹள்ளி டவுன் பகுதியில் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்று உள்ளது.இந்த கல்லூரியில் படிக்கும் காஷ்மீரை சேர்ந்த 3 மாணவிகள் புல்வாமா தாக்குதல் தொடர்பான வீடியோவை சமூக வலை தளத்தில் வெளியிட்டு இருந்தன. அதில் அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தும், புல்வாமா சம்பவத்தை வரவேற்றும் இருந்தனர்.
இதை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்களான அமீர், பாஷித், தலேப் ஆகிய 3 பேரையும் தேச துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர்.கைதான 3 மாணவர்களும் கிரிமினல் சட்ட குற்றப்பிரிவு 169-ன்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.3 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரிகள் அமைப்பு போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நெருக்கடி காரணமாக காஷ்மீர் மாணவர்கள் 3 பேரையும் கர்நாடக போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
இந்த நிலையில் கதக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீ ராம் சேனா அமைப்பின் தலைவர் சித்தலிங்கா சுவாமி,பாகிஸ்தான் ஆதரவு குரல் எழுப்பிய மாணவர்களின் நாக்கை வெட்டுப்பவர்களுக்கு ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற பாடலை பாடி வலைத்தளங்களில் பதிவிட்டதற்காக காஷ்மீர் மாணவர்கள் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்த போது, இந்துத்துவ அமைப்பினர் மாணவர்கள் அமைப்பு மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சித்தலிங்கா சுவாமியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.