டெல்லி: சீனாவில் கொரோனா தாக்குதல் காரணமாக அனைத்து சேவைகளையும் வரும் ஜூன் மாதம் 20 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் கொரோனா தாக்குதல் வேகமாக பரவி வரும் நிலையில், பலி எண்ணிக்கை 2,118 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மார்ச் 28-ம் தேதி வரை சேவை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டதை நீட்டிக்க நேற்றிரவு நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஏர் இந்தியா அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஊகானில் எஞ்சியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு புறப்படுவதாக இருந்த விமானப்படையின் மிகப்பெரிய விமானமான குளோப்மாஸ்டர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று புறப்படவில்லை.
பயணிகள், விமான ஊழியர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இண்டிகோ, ஏர் இந்தியா, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இதேபோல் பெங்களூரு - ஹாங்காங் இடையேயான விமான சேவையும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.