×

குடியாத்தம் அருகே வலசை கிராம மலைப்பகுதியில் கீழடியை விட பழமையான புதிய கற்கால தொல்பொருள் மையம்: சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடிப்பு

குடியாத்தம்:  குடியாத்தம் பலமனேர் சாலையில் ஆந்திர எல்லைப்பகுதி அருகே வலசை கிராமம் உள்ளது. இங்குள்ள செந்தூர்மலை பகுதியில் தொல்லியல் பொருட்கள் இருக்கலாம் என கடந்த 2002ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் சில பகுதிகளை தேர்ந்தெடுத்தனர். ஆனால், இந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. அதன்பிறகு தற்போது மீண்டும் அதற்கான ஆய்வு தொடங்கி உள்ளது. சென்னை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவராக இருந்த கேரளாவை சேர்ந்த ஜூனுகோஸ் தற்போது சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த இடத்தில் ஒரு அகழ்வாராய்வை  மேற்கொண்டால் அரிய தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் என்று சில இடங்களை குறித்துக் கொண்டு அந்த இடத்தில் ஆய்வை மேற்கொள்ள முடிவு செய்தார்.

இதுகுறித்து பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் சவுந்தர்ராஜிடம் தெரிவித்தார். அதற்கான அனுமதி கிடைத்ததும் கடந்த 3ம் தேதி பல்கலைக்கழகத்தை சேர்ந்த 21 மாணவர்களுடன் குடியாத்தம் அருகே செந்தூர்மலையில் அகழ்வாராய்ச்சி பணியை மேற்கொண்டார். கடந்த 20 நாட்களாக அங்கு அகழ்வாராய்வு பணிகள் நடந்து வருகிறது.   வலசை கிராமத்தில் 30 சதுர மீட்டர் இடத்தில் ஆய்வு செய்ததில் பல அரிய தொல்லியல் பொருட்களை இந்த குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரீகம், நகர நாகரீகம். ஆனால், வலசை கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடிக்கும் பழமையான புதிய கற்காலமும், விவசாயம் தோன்றிய காலமும் அடங்கிய இடமாக இக்கிராமம் உள்ளது என்று இந்த குழுவினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து, உதவி பேராசிரியர் ஜினுகோஸ் கூறியதாவது: தமிழகத்தில் வலசை கிராமத்தில் தான் முதன் முதலில் சாம்பல் மேடு அமைப்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய கற்கால கருவிகள், பானை ஓடுகள், விலங்குகளின் எலும்புகள் என அதிக அளவில் கிடைத்துள்ளது. பானை ஓடுகளில் உட்புறம் ஒரு வண்ணமும் வெளிப்புறம் ஒருவண்ணமும் உள்ள ஓடுகள் நிறைய கிடைத்துள்ளன. இது அங்கே வாழ்ந்த மக்களின் பானை செய்யும் தொழில்நுட்ப அறிவை விளக்குகிறது.  இங்கே சில இடங்களில் இறந்தவர்களின் எலும்புகளை புதைத்து வைக்கும் வட்டக்கல் அமைப்புகள் உள்ளன. மேலும், கற்காலத்திற்கும்  அடுத்த நிலையிலும் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கு அறிகுறியாக இரும்பை உருக்கி வார்க்க பயன்படும் குழல் போன்ற சுடுமண் குழாய்களும், உருகிய நிலையில் இரும்பு தாதுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான வயது மற்றும் முழு விவரங்கள் ஆய்வுக்கு பின்னர் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்கள் பார்வையிட்டனர்
குடியாத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் விஜயரங்கம் தலைமையிலான 25க்கும் மேற்பட்ட முதுகலை மாணவர்கள் நேற்று அகழாய்வு பணிகளை நேரில் பார்வையிட்டு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் கற்கால பொருட்கள் குறித்து விளக்கம் கேட்டறிந்தனர்.

அரசு உதவ முன்வர வேண்டும்
அரசு பல்கலைக்கழக மாணவர்களின்  கடின உழைப்பை பார்த்து  அகழ்வு பணிகளுக்கு தமிழக அரசு அதிகபட்ச உதவிகள் செய்ய வேண்டும். ஆய்வுக்குழு மாணவர்கள் தங்குவதற்கு பயன்படுத்தும் பழைய டென்ட் போன்றவற்றை புதுப்பித்து தரவேண்டும். கடுமையான வெயில் பகுதிகளில் அகழ்வு பணிகளில் உடலுழைப்பை கொடுத்து ஈடுபடும் இவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு அளிக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Old Neolithic Archaeological Center ,Kodiyattam ,Valasai Village Valasai Village ,Gudiyatham , Old Neolithic,Archaeological Center,Valasai Village, Gudiyatham
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ