×

கோயில் வாசலில் செயின் அணிவிப்பு; மாணவி கழுத்தில் தாலி கட்டி நடித்த மாணவன்: களக்காட்டில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

களக்காடு: விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக ஸ்மார்ட்போன் உள்ளிட்ட கருவிகளின் வருகையால் சமூகத்திற்கு நன்மைகள் கிடைத்தாலும், அதனால் தீமைகளும் அதிகரித்து வருகின்றன. சமூக வலைதளங்களால் நமக்கு எத்தனையோ பயனுள்ள தகவல்களை பெற்று வருகிறோம். இருப்பினும் அவைகளால் ஏற்படும் கலாச்சார சீரழிவுகளுக்கும் குறைவில்லை. சமூக வலைதளங்களால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதிலும் மாணவ, மாணவிகளின் மத்தியில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகம்.இன்றைய மாணவ-மாணவிகள் பள்ளி பருவத்தில் காதல் என்ற நெருப்பில் விழுந்து விட்டில் பூச்சிகளாய் தங்களது வாழ்க்கைகளை தொலைத்து வருகின்றனர். பள்ளியில் எவ்வளவோ கட்டுப்பாடுகளை விதித்தாலும், எல்லை தாண்டும் மாணவர்களின் முடிவு துயரமாகவே அமைகிறது.

கல்வி பயிலும் வயதில் மாணவிகள் ஸ்மார்ட் போன்களில் மூழ்கி தங்கள் வாழ்க்கையை தொலைத்து கொள்ளும் விஷயங்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியிலும் மாணவ-மாணவிகளின் செயல்பாடுகள் கலங்க வைப்பதாகவே உள்ளது. களக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஒரு மாணவன், பள்ளி சீருடையில் உள்ள மாணவி கழுத்தில் தாலி கட்டுவது போல் நடித்து செயினை அணிவிக்கிறார். அந்த மாணவியும் வெட்கத்தில் தலை குனிந்தபடி செயினை தாலி போல் ஏற்றுக் கொள்கிறார். 22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர வைக்கிறது. அந்த காட்சிகளுக்கு பின்னணியில் சாமி படத்தில் வரும் ‘இதுதானா, இதுதானா’ பாடலும் ஒலிக்கிறது.

இதைவைத்து பார்க்கும் போது சம்பந்தப்பட்ட மாணவனோ அல்லது மாணவியோ வீடியோவை எடிட் செய்து வெளியிட்டார்களா? அல்லது அவர்களின் நண்பர்கள் பரவ விட்டார்களா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. மேலும் அந்த வீடியோவில் இந்த ஜோடிகளுக்கு பின் வேறு சில மாணவ-மாணவிகளும் தெரிகின்றனர். வீடியோ களக்காட்டில் உள்ள ஒரு கோயிலின் வெளி பிரகாரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. காதலர் தினமான கடந்த 14ம்தேதி இந்த காட்சிகள் அரங்கேறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த காட்சி, எப்போது, எப்படி, யாரால் எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் உறுதியாக தெரியவில்லை. அதில் இடம்பெற்றுள்ள மாணவ-மாணவிகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர். எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவில்லை. திருமண பந்தத்தில் ஆணையும், பெண்ணையும் இணைப்பது தாலி.

புனித தன்மை வாய்ந்த தாலியை மாணவர்கள், மாணவிகளுக்கு கட்டுவது போல் விளையாட்டாக நடித்தாலும் இது கலாச்சார சீரழிவின் உச்சமே என்கின்றனர் பொதுமக்கள். இந்த வீடியோ காட்சிகள் களக்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘நவீன செல்போன்களின் தாக்கம் மாணவ, மாணவிகளை பாடாய்படுத்தி வருகிறது. 3 வயது முதல் சிறுவர், சிறுமியர்கள் செல்போனில் மூழ்கத் தொடங்கி விட்டனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும்போது அவர்கள் ஸ்மார்ட் ேபான்களை பயன்படுத்தும் விதம், பதின்ம பருவத்தில் அவர்களது செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வளர்க்க வேண்டும். விளையாட்டாக செய்யும் நிகழ்வுகள் கூட எதிர்காலத்தில் அவர்களது வாழ்க்கைக்கு ஊறுவிளைவிக்க கூடும் என்பதை மாணவ, மாணவிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும்’’ என்றனர்.

Tags : Student ,Video Temple ,Chain ,Talli , Student, Dali, Student, Kalakkad
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...