தர்மபுரி: சிவாடியில் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு அமைப்பதை கைவிடக்கோரி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிவாடி ஊர் பொதுமக்கள் சார்பில், சிவாடியில் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு அமைப்பதை கைவிடக்கோரி, நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் ரவீந்திரன் பேசுகையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து, தர்மபுரி வரை விடிபிஎல் திட்டத்தின் மூலம், சுமார் 700 கிலோ மீட்டர் பைப் லைன் அமைத்து சிவாடி கிராமத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் சார்பில் எரிபொருள் சேமிப்பு கிடங்கு அமைக்க முடிவெடுத்துள்ளனர்.
இத்திட்டத்துக்காக சிவாடியில் 1,813 கோடியில் 123 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய உள்ளனர். இவை அனைத்தும் தலித் மக்களின் நிலம். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாயிகளின் விருப்பம் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சிக்கிறது. இதை கைவிட்டு பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு அமைக்க, அரசு புறம்போக்கு நிலம், வன நிலங்களை பயன்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து கலெக்டர் மலர்விழியை சந்தித்து, இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 98 மனுக்களை வழங்கினர்.