புதுடெல்லி: டெல்லி காவல் துறையின் 73 வது நிறுவன தினம் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். இதையொட்டி நியு போலீஸ் லைன் கிங்ஸ்வே கேம்ப் மைதானத்தில் பாரம்பரிய அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது வீர தீர, திறமையாக செயல்பட்டவர்களை பாராட்டும் வகையில் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த பதக்கங்கள் 42 பேருக்கு வழங்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜனவரி 5ம தேதி நடைபெற்ற வன்முறை குறித்து விசாரணை நடத்தி வரும் துணை காவல் ஆணையர் ( குற்றப் பிரிவு) ஜாய் திர்கே, டெல்லி கூடுதல் துணை காவல் ஆணையர் ( வடக்கு) ஹரேந்தர் குமார் சிங் உள்ளிட்டோருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
கூடுதல் துணை காவல் ஆணையராக இருந்த சிங் (வடக்கு) டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணியிடமாற்றம் செய்யப்பட்டு இப்போது டிசிபி( ரயில்வே) உள்ளார். திஸ் ஹிசாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், போலீசாருக்கு இடையிலான மோதல் வழக்கு விசாரணைக்காக இந்த மாறுதல் செய்யப்பட்டது. வடக்கு மாவட்டம் சதார் பஜாருக்கு சிறந்த காவல் நிலைய கோப்பை கிடைத்துள்ளது. தென்கிழக்கு டெல்லியின் கல்காஜி ( முதல் பரிசு), ஷாதாராவின் பார்ஷ் பஜார் காவல் நிலையத்துக்கு இரண்டாவது பரிசும் கிடைத்துள்ளது.