×

காஷ்மீருக்கு தனி ராணுவ கட்டளை பிரிவு அமைக்க திட்டம்: பிபின் ராவத் பேட்டி

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு என தனி ராணுவ கட்டளை பிரிவு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். முப்படைகளின் தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத், டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு என தனி ராணுவ கட்டளை பிரிவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விமான பாதுகாப்பு பிரிவு அடுத்த ஆண்டு தொடக்கத்திலும், தீபகற்ப பிரிவு அடுத்த ஆண்டு இறுதியிலும் செயல்படத் தொடங்கும். விமான பாதுகாப்பு பிரிவுக்கு, விமானப்படை தலைமை தாங்கும். இதன் கட்டுப்பாட்டில் நீண்ட தூரம் சென்றும் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் விமான பாதுகாப்பு பிரிவின் சொத்துக்கள் வரும்.

கடற்படையின் கிழக்கு மற்றும் மேற்கு பிரிவுகள் தீபகற்ப பிரிவின் கீழ் ஒருங்கிணைக்கப்படும். மேலும் தனி பயிற்சி பிரிவு, தளவாடப்பிரிவு, கொள்கை பிரிவை கொண்டதாக ராணுவம் இருக்கும். இது தவிர 114 போர் விமானங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தையும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கடற்படை 3வது விமானந் தாங்கி கப்பல் கேட்டு கோரிக்கை வைத்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள விமானந்தாங்கி கப்பலின் செயல்பாட்டை மதிப்பீடு செய்த பிறகு இது தொடர்பாக முடிவு செய்யப்படும். விமானந் தாங்கி கப்பல்களை விட நீர்மூழ்கி கப்பல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வெளிநாடுகளில் ராணுவ தளவாடங்களையும் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு பிபின் ராவத் தெரிவித்தார்.

Tags : Army Command Division ,Army Command ,Bipin Rawat , Kashmir, Separate Army Command, Division Plan, Bipin Rawat
× RELATED தேச பக்தி பற்றி மோடி எங்களுக்கு பாடம்...