மீனம்பாக்கம்: இந்தியாவில் சென்னை விமான நிலையத்தில்தான் கடத்தல் சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் நடக்கிறது. சென்னை விமான நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு 1,301 வழக்குகள் பதிவாகின. 2018ல் 658 வழக்குகள் தான் பதிவாகி
இருந்தது. இதேபோல் 2019ல் ₹140 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் 2018ல் ₹85.64 கோடி தங்கம் தான் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் 2019ல் தங்கம் தொடர்பாக 841 வழக்குகள் பதிவாகின. ஆனால் 2018ல் 389 வழக்குகள்
தான் பதிவாகியிருந்தன. அதேபோல் இந்த 841 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட தங்கம் மொத்தம் 355 கிலோ. 2018ல் கைப்பற்றப்பட்ட தங்கம் மொத்தம் 232 கிலோ. அதேபோல் வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற கரன்சிகள் 2019ல் ₹10 கோடி. 2018ல் ₹6 கோடி.
வெளிநாடுகளில் இருந்து நட்சத்திர ஆமைகள், பச்சை பாம்பு, கங்காரு. சிவப்புக்காது அலங்கார ஆமைகள், சுறாமீன் எலும்புகள் போன்ற வனவிலங்குகள் கடத்தல் தொடர்பாக 2019ல் 14 வழக்குகள் பதிவாகின. ஆனால் 2018ல் வெறும் 3 வழக்குகள் மட்டுமே பதிவாகின. அதேபோல் பதப்படுத்தப்பட்ட குங்குமப்பூ, 2018ல் ₹1.4 கோடி மதிப்புடைய 65 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 2018ல் ₹78 லட்சம் மதிப்புடைய 33 கிலோ.
வெளிநாடுகளில் இருந்து தபாலில் கஞ்சா கடத்தும் வழக்கு மொத்தம் 55 பார்சல்களில் 6.7 கிலோ கடத்தி வரப்பட்டது. 2018ல் ஒன்றே ஒன்று மட்டுமே நடந்தது. மேலும் 2019ல் புதிதாக அழகு சாதனங்கள் என்ற பெயரில் போதை மாத்திரைகள், போதை ஊசிகள், போதை மருந்துகள் இதுவரை 7 முறை ₹53 லட்சம் மதிப்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் 2018ல் இதுபோன்ற வழக்குகள் எதுவும் பதிவு செய்யவில்லை. மேலும் ₹2.25 கோடி மதிப்புடைய வைரம் கைப்பற்றப்பட்டது. ஆனால் 2018ல் வைரக்கடத்தல் வழக்கு ஒன்று கூட பதிவாகவில்லை. மிகப்பெரிய அளவில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வரும் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக 113 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 21 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். ஆனால் 2018ல் சர்வதேச கடத்தல்காரர்கள் வெறும் 36 பேர் தான் கைது செய்யப்பட்டனர். இதற்கு காரணம் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளை எளிதில் ஏமாற்றி விடலாம் என ஆசாமிகள் கருதுகின்றனர். மேலும் கடத்தல் ஆசாமிகள், சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை குறிவைத்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேநிலை நீடித்தால் சென்னை விமான நிலையம் முழுமையாக சர்வதேச கடத்தல் கும்பல் வசம் சென்றுவிடும். எனவே, சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய்த்துறையினர் இரும்புக்கரம் மூலம் அடக்கி, கடத்தலை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
3 வெளிநாட்டு பெண்கள் காபிபோசா சட்டத்தில் கைது
கடந்த 12.1.2019ல் ஹாங்காங்கில் இருந்து கெட்டே பசிபிக் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ₹8 கோடி மதிப்புடைய 24 கிலோ தங்கத்தை 2 கொரிய நாட்டை சேர்ந்த பெண்கள் கடத்தி வந்தனர். இதேபோல் கோலாலம்பூரில் இருந்து 6.8 கிலோ தங்கத்தை ஏர்ஏசியா விமானத்தில் கடந்த 25.8.2019ல் ஒரு மலேசியா பெண் கடத்தி வந்துள்ளார். அதன் மதிப்பு ₹2.52 கோடி. இந்த மூன்று பெண்களும் அதிகளவில் தங்கம் கடத்தலில் ஈடுபட்டதால் அவர்கள் 3 பேரும் காபிபோசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.