புதுடெல்லி: ‘‘இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும்,’’ என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறி உள்ளார். ‘அரசு வேலைவாய்ப்பு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதில் முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே உள்ளது. இடஒதுக்கீடு ஒன்றும் அடிப்படை உரிமையல்ல,’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து நேற்று பேட்டியளித்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்ய மத்திய அரசு மனு செய்ய வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் இந்த விஷயத்தில் எளிதான வேலை என்றால், அவசர சட்டம் மூலம் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதுதான். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிழையை சரி செய்ய மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும்,’’ என்றார்.