சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் சரணடைந்த இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் கார், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 குரூப் 2ஏ மற்றும் விஏஓ தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தனித்தனியே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளாக் ஓம் காந்தனை கடந்த 6ம் தேதி முதல் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயகுமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பின்னர் ஜெயகுமாரை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றம் அனுமதியுடன் 7 நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அந்த 7-நாள் விசாரணை நிறைவடைகிறது. இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் இடைத்தரகர் ஜெயக்குமாரை ஆஜர்படுத்த உள்ளனர். முதற்கட்டமாக விசாரணை நடத்திய போது இந்த முறைகேடுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், சிபிசிஐடி போலீசார் உள்நோக்கத்துடன் தன்னை இந்த வழக்கில் சேர்த்ததாக தெரிவித்த ஜெயக்குமார் நாளுக்கு நாள் விசாரணை நடைபெற்ற நிலையில் தான் செய்த முறைகேடுகளை ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
குறிப்பாக யார் யாரெல்லாம் இதில் தொடர்பில் உள்ளனர், யார் மூலம் பணம் வாங்கியது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வாக்குமூலமாக தெரிவித்திருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் ஜெயக்குமாருக்கு உதவிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயக்குமாருக்கு சொந்தமாக 2 கார்கள் வாங்கப்பட்டது தெரிய வந்தது. தேர்வர்களிடம் இருந்து வாங்கப்பட்ட பணத்தில் 2 கார்களும், 12-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் அந்த பணத்தை முறைகேடாக அவர் சேர்த்து வைக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவு பெற்று அந்த பணத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். சிபிசிஐடி போலீசார் ஜெயக்குமாரை பொறுத்தவரையில் 7 நாட்கள் மட்டுமே விசாரணை நடத்தியுள்ளனர். இன்னும் கூடுதல் அவகாசம் அவரை விசாரிக்க தேவை என்பதன் அடிப்படையில் மீண்டும் மனுத்தாக்கல் செய்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படும் போது அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.