×

விளைநிலத்தில் அமைக்கப்பட்ட உயர் மின்கோபுரத்தின் மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் : தர்மபுரி அருகே பரபரப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா கோரப்பள்ளியை சேர்ந்தவர் சின்னசாமி(34). விவசாயி. இவருக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்துள்ளார். மேலும், அந்த நிலத்தில் 35 தென்னை மரங்கள், 2 ஆழ்துளை கிணறு மற்றும் ஒரு திறந்தவெளி கிணறு உள்ளது. இந்நிலையில், சின்னசாமியின் விளைநிலம் வழியாக பவர்கிரிட் நிறுவனம் சார்பில், உயர்மின்கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், அதற்கான உரிய இழப்பீடு தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இது குறித்து, கலெக்டர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சின்னசாமி மனு அளித்தார். ஆனாலும், இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று இழப்பீடு தொகை வழங்கும் வரை, மின்கோபுர பணி மற்றும் மின்கம்பி அமைக்கும் பணியை மேற்கொள்ளக்கூடாது என கூறி, அவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 130 அடி உயர் மின்கோபுரத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் ஏறினார். பின்னர், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பவர்கிரிட் பொதுமேலாளர் வெங்கட்ராமன், நல்லம்பள்ளி தாசில்தார் சரவணன் மற்றும் இண்டூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.  சின்னசாமியிடம், அதிகாரிகள் செல்போனில் தொடர்பு கொண்டு, நிலத்தை அளந்து இழப்பீடு தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்தனர். இதையடுத்து, அவர் இறங்கினார். பின்னர் அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். விரைவில் அவருக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து சென்றனர்.


Tags : suicide ,Dharmapuri Farmer ,tower , Farmer commits suicide, climbing ,high-rise tower on the farm
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...