சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-4க்கான சான்றிதழ் சரிபார்பு மற்றும் கலந்தாய்வு வரும் 19ம் தேதி துவங்குகிறது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-4, 2018-19 மற்றும் 19-20ல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 14.6.2019ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களை கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 1.9.19 அன்று நடைபெற்று எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் 12.11.19 அன்று வெளியிடப்பட்டது.
இத்தெரிவு தொடர்பான மூலச் சான்றிதழ் சரிபார்பு மற்றும் கலந்தாய்வு சென்னை, தேர்வாணைய சாலையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 19ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மற்றும் ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம், விவரங்கள் அடங்கிய அழைப்புகடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.