தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தலைவியாக செல்வி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். செல்வியின் கணவர் ரமேஷ் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவருடைய இருக்கையில் அமர்ந்து, டிக்டாக் வீடியோ எடுத்து வாட்ஸ்அப் குரூப்பில் பலருக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தலின்போது தன் மனைவி ஊராட்சி தலைவியாக பதவிக்கு வந்தால், அவரது அலுவலகத்திற்குகூட நேரில் சென்று அவரின் பதவிக்கு இடையூறு செய்யமாட்டேன் என ரமேஷ் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், மனைவியின் ஊராட்சி மன்ற தலைவி இருக்கையில் அமர்ந்து கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டவரை தண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.