சென்னை: சென்னை சாலிகிராமம் பகுதியில் பாஜ கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், பிரதமர் மோடியை கண்டித்து கோஷம் எழுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாஜவினர் அந்த வாலிபரை கண்டித்துள்ளனர். மேலும், இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். அதில் பட்டுக்கோட்டையை சேர்ந்த பிஇ பட்டதாரி கனகநாதன் (23) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
* திருமங்கலத்தில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வணிக வளாகத்தில் செயல்படும் சிந்தாமணி கூட்டுறவு சங்க மருந்தகம், பசுமை காய்கறி கடை, ஸ்வீட் ஸ்டால் மற்றும் டீக்கடை ஆகியவற்றின் பூட்டை நேற்று முன்தினம் இரவு உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
* வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தயாளன் (35) என்பவர், குடும்ப தகராறில் மனைவி மற்றும் குழந்தை பிரிந்து சென்றதால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* போரூர், ஆர்.இ.நகரில் உள்ள பழமைவாய்ந்த ராமநாதீஸ்வரர் கோயிலுக்குள் நேற்று முன்தினம் இரவு நுழைந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
* புளியந்தோப்பு நெடுஞ்சாலையை சேர்ந்த சேட்டு (42) என்பவரிடம் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த அவினாஷ் (28), பெரியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
* பீர்க்கன்காரணை, சதானந்தபுரத்தை சேர்ந்த இளம்பெண், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றபோது, அவரை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பன்னீர்செல்வம் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கத்தியுடன் டிக்டாக் சிறுவன் கைது
கையில் கத்தியுடன் கானா பாடலுக்கு ஆடும் வீடியோவை டிக்டாக் செயலியில் வெளியிட்ட புது பெருங்களத்தூர், வேல் நகரைச் சேர்ந்த கோவிந்தன் (18), அவரது நண்பர் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.கோவிந்தனை புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை செங்கல்பட்டு சிறார் சீர்திருத்த மையத்தில் சேர்த்தனர்.