புதுடெல்லி: விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இந்திய கடற்படையில் 2018ம் ஆண்டு இணைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை இன்னும் சேர்க்கப்படவில்லை. இதன் தயாரிப்பு பணிகள் தாமதமாவது குறித்து மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியதாவது: விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தின் கட்டுமானம், தொழில்நுட்பம் சார்ந்த முக்கிய பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. ரஷ்யாவில் இருந்து விமான உபகரணங்கள் வினியோகம் தாமதமானதால், கப்பலை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் தயாரிக்க முடியவில்லை. 37,500 டன் எடை கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் அடுத்தாண்டு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரும் 2022ம் ஆண்டிற்குள் கடற்படையில் இணைக்கப்படும் என்றார்.