×

சளி, காய்ச்சல், இருமல், தும்மல் இருந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும்: கொரோனா விழிப்புணர்வு முகாமில் தகவல்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா  வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாமில் பேசிய மருத்துவ அலுவலர் சளி, காய்ச்சல், இருமல், தும்மல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றார். மருத்துவ அலுவலர் லாவண்யா தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி, சுகாதார மேற்பார்வையாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதிநேர சுகாதார செவிலியர் சுப்புலட்சுமி வரவேற்றார்.

முகாமில் மருத்துவ அலுவலர்  லாவண்யா பேசியதாவது: கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை வைரஸ் கிருமி. சீனாவின் வூகான்  நகரத்தில் இந்த  வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு ஆகியவையும், ஒரு சிலருக்கு மூச்சுத் திணறலும் ஏற்படுவது  இந்த நோயின் அறிகுறிகளாகும். இந்த நோய் அறிகுறிகள் கண்ட  நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர் திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது.

மேலும் நீர் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்போது கைகள் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய் வராமல் தடுக்க தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு, குறைந்தது 30 வினாடிகள் நன்கு தேய்த்து கழுவவேண்டும். இருமும் போதும்,  தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல், இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவம்  பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் கை கழுவும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. கர்ப்பிணிகள், பொதுமக்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிராம சுகாதார செவிலியர் வனிதா நன்றி கூறினார்.

Tags : Corona Awareness Camp ,Corona , Corona
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!