புதுடெல்லி: ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு மத்திய அரசு 1 நன்கொடை தந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக தாழ்த்தப்பட்டவர் ஒருவர் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் கொண்ட, ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை’ அமைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களவையில் அறிவித்தார். இந்நிலையில், இந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டும் பணிகளை தொடங்குவதற்கு வழி செய்யும் வகையில், மத்திய அரசு முதலாவதாக ₹1 நன்கொடை அளித்துள்ளது. இந்த தொகையை அரசின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் முர்மு அறக்கட்டளையில் செலுத்தினார். நன்கொடைகள், மானியங்கள், சந்தாக்கள், நிதி உதவி ஆகியவற்றையும் அசையா சொத்து மற்றும் ரொக்க பணத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி நன்கொடையாக பெற்று கொள்ளப்படும் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது. டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அறக்கட்டளை அலுவலகம் இயங்கி வருகிறது.