×

அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்த பயங்கரம்: உயிருடன் எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பலி

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவில் மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்ட 50 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டம், சில்லோட் தாலுகாவில் உள்ள அந்தாரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் மொகிதே(50). இவரது பக்கத்து வீட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 50 வயது பெண் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு கணவனும் இரண்டு மகள்களும் உள்ளனர். அந்த பெண்ணின் வீட்டுக்கு சந்தோஷ் மொகிதே அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 11 மணியளவில் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, சந்தோஷ் மொகிதே அவரது வீட்டுக்கு சென்றார். ஆனால், சந்தோஷ் மொகிதேயை அந்த பெண் தனது வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். இதனால், கோபமடைந்த சந்தோஷ் மொகிதே அந்த பெண்ணை எட்டி உதைத்து தள்ளிவிட்டு உள்ளே நுழைந்து கதவை பூட்டினார்.

பின்னர் அந்த பெண் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்த சந்தோஷ் மொகிதே, வீட்டுக்கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தப்பியோடி விட்டார். உடலில் தீப்பற்றி எரிந்ததும் அந்த பெண் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து அவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால், அந்த பெண்ணுக்கு 95 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததால் அவர் அவுரங்காபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அந்த பெண் உயிரிழந்ததாக மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளர் சுரேஷ் ஹர்பரே நேற்று கூறினார்.

இறப்பதற்கு முன்பு அந்த பெண் போலீசிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தாவது; அண்டை வீட்டுக்காரர் என்ற முறையில் சந்தோஷ் மொகிதேயுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. அவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 11 மணிக்கு எனது கணவர் இல்லாத நேரத்தில் சந்தோஷ் மொகிதே எனது வீட்டுக்கு வந்தார். இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தால் அக்கம் பக்கத்தினர் தவறாக நினைப்பார்கள் என்று கூறி அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தேன். ஆனால், அவர் என்னை எட்டி உதைத்து தள்ளிவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து விட்டு தப்பியோடி விட்டார் என கூறியுள்ளார். இதற்கிடையே, குற்றவாளி சந்தோஷ் மொகிதேயை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேராசிரியை தொடர்ந்து கவலைக்கிடம்
மகாராஷ்டிராவின் ஹிங்கன்காட் என்ற இடத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியை அங்கிதா பிசுடேயின்(25) நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இவரை விகேஷ் நாக்ராலே(27) என்ற அதே ஊரைச் சேர்ந்தவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். விகேஷூக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட போதிலும் அங்கிதாவுடன் பழகினார். ஆனால், அவரது மோசமான நடவடிக்கைகளால் விகேஷூடனான உறவை அங்கிதா துண்டித்துக் கொண்டார். இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமையன்று ஹிங்கன்காட்டில் உள்ள கல்லூரிக்கு பஸ்சில் வந்து இறங்கியபோது அங்கு காத்திருந்த விகேஷ், அங்கிதா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் பலத்த காயமடைந்த அங்கிதா தற்போது நாக்பூரில் உள்ள ஆரஞ்ச் சிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குற்றவாளி விகேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Aurangabad ,district ,death , Aurangabad, woman, sacrifice
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...